April 26, 2024
  • April 26, 2024
Breaking News
July 30, 2018

தெலங்கானாவில் அதிக விலை திரையரங்குகளுக்கு அபராதம், சிறைத் தண்டனை

By 0 1214 Views

இப்போதைய சினிமா ரசிகர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதே திரையரங்குக் கட்டணம்தான். டிக்கெட் கட்டணத்தைவிட கேன்டீன் பொருள்கள் திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதுதான் அநியாயயமாக இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை.

ஆனால், இப்படி தாறுமாறான விலையில் தியேட்டர்களில் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்றால் அதற்கு அபராதம், சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றங்களின் அடிப்படையிலும், அடுத்தடுத்து அதே குற்றம் நிரூபிக்கப்படும் வகையிலும் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் தொடர்ந்து தவறு செய்தால் 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்துடன் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தெலங்கானாவில் நடைமுறைக்கு வருகிறது. இங்கும் இதுபோன்ற நடைமுறை வந்தால் மக்கள் வரவேற்கவே செய்வார்கள்.