March 28, 2024
  • March 28, 2024
Breaking News
June 12, 2021

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது

By 0 378 Views

புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஜார்ஜ் பிளாய்டின் கொலையை வெளி உலகிற்கு தெரிய வைத்த டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா பிரேசியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் மிக முக்கியமான காரணம் ஆகும்.

உலகம் முழுவதும் பரவிய வீடியோவால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற பெயரில், பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை அம்பலப்படுத்திய அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவமாக கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜார்ஜ் பிளாய்டின் கொலையை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக புலிட்சர் அமைப்பு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.