April 19, 2024
  • April 19, 2024
Breaking News
May 19, 2018

மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் ஒரு ஏமாற்று வேலை – வைகோ

By 0 1056 Views

மத்திய அரசு மே 14-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வரைவு செயல் திட்டம் பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது –

காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் 2018 என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14-ந் தேதி ஒரு வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்தது.

காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கும் வகையில், வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, 17-ந் தேதி திருத்தம் செய்யப்பட்ட வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இறுதி ஆணை பிறப்பித்துள்ளது.

‘காவிரி மேலாண்மை வாரியம்’ எனும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கினால்தான், இறுதித் தீர்ப்பைச் செயற்படுத்திட முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

மத்திய அரசின் வரைவு செயல்திட்டத்தில் ‘தற்சார்பு அதிகாரம்’ என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.

‘காவிரி மேலாண்மை ஆணையம்’ என்று பெயரை மட்டும் சூட்டி விட்டு, அதிகாரம் ஏதுமற்ற வெற்று அமைப்பை உருவாக்குவது என்பது ஏமாற்று வேலை; காவிரி வரைவு செயல்திட்டத்தின் பிரிவு 9 ஆணையத்தின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகள் பற்றி குறிப்பிடுகிறது.

பிரிவு 9 (1) ன் உட்பிரிவு 2-ல் காவிரி ஒழுங்குமுறைக்குழு உதவியுடன் அணைகளின் இயக்கம் மற்றும் தண்ணீர் திறப்பதை ஒழுங்குபடுத்தும் பணியையும் காவிரி மேலாண்மை ஆணையம் ‘மேற்பார்வையிடும்’ என்றுதான் வரைவு செயல்திட்டம் கூறுகிறது. அப்படியென்றால் அணைகளைத் திறந்து தண்ணீரை விடும் அதிகாரம் யாருக்கு? இது பற்றி வரைவு செயல்திட்டம் கூறுவது என்ன?

பிரிவு 9 (3) ன் உட்பிரிவு 4-ல் ‘கேரளாவில் உள்ள பாணாசுர சாகர், கர்நாடகத்திலுள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜ சாகர், தமிழ்நாட்டின் கீழ் பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில் தண்ணீர் திறந்து விடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் வழங்கும்.”

இதற்கு என்ன பொருள்? காவிரியில் உள்ள அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களிடம்தான் இருக்கும் என்று வரைவு செயல்திட்டம் கூறுகிறது.

இதிலிருந்து காவிரியின் அணைகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்காது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

தமிழ்நாட்டின் தண்ணீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு கர்நாடகம் காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று கோரினால் கர்நாடகம் தற்போது போலவே நீர் திறக்க முடியாது என்று அடாவடி செய்தால் என்ன செய்வது? கர்நாடகத்தைப் பணிய வைக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இருக்கிறதா என்றால் வரைவு செயல் திட்டத்தின்படி அதற்கு வழியே இல்லை.

இதுகுறித்து வரைவு செயல்திட்டம் பிரிவு 9 (3) உட்பிரிவு 14 கூறுவது என்ன?

‘தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் காவிரி நடுவர் மன்றத்தின் முடிவுகளை, வழி காட்டுதலைச் செயற்படுத்த ஒத்துழைக்காவிடில், ஆணையம் மத்திய அரசின் உதவியை நாடி, உச்ச நீதிமன்றம் 16.2.2018-ல் திருத்தம் செய்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயற்படுத்தும்…’

வரைவு செயல்திட்டத்தின் படி, கர்நாடகம் தமிழகத்திற்கு வழக்கம் போல தண்ணீர் திறப்பதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஆணையம் மத்திய அரசின் உதவியை நாடுமே தவிர, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு அறவே இல்லை என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

மத்திய அரசின் வரைவு செயல்திட்டத்தில் கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே புது அணைகள் கட்டுவதைத் தடை செய்யும் அதிகாரம் எதுவும் ஆணையத்திற்கு அளிக்கவில்லை.

இந்நிலையில், புதிய அணைகள் கட்டுவதைத் திட்டவட்டமாக தடை செய்யும் உத்தரவை உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவில் வழங்கவில்லை. இதனால் தமிழ்நாடுதான் மோசமான பாதிப்புக்கு உள்ளாகும்.

மத்திய அரசு தாக்கல் செய்த வரைவுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று வழங்கியுள்ள இறுதி உத்தரவில் காவிரி மேலாண்மை ஆணையத்தை மட்டும் அணுகினால் போதும்; ஆணையத்திற்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறது.

ஆனால், வரைவு செயல் திட்டத்தில் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது கண்டனத்துக்கு உரியது.

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஏற்பு வழங்கி பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குத்தான் அதிகமான இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஒட்டு மொத்தமாக நீர்த்துப் போகச் செய்துள்ள மத்திய அரசின் வரைவு செயல்திட்டம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து அரசியல் சாசன அமர்வுக்கு மேல் முறையீடு செய்வது ஒன்றுதான் தற்போது தமிழ் நாட்டிற்கு இருக்கும் ஒரே வழி.

தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தமிழகத்தின் உயிராதாரமான காவிரி உரிமையைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.