April 24, 2024
  • April 24, 2024
Breaking News
October 23, 2018

தியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்

By 0 1195 Views

தொடர்ந்து வரும் ‘மீ டூ’ புகார்களில் நேற்றைய செய்திகளில் நடிகரும், தயாரிப்பாளர் – இயக்குநருமான தியாகராஜனையும் குற்றம் சாட்டியிருந்தார் பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர்.

இந்த விவகாரத்தில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, குற்றம் சாட்டிய பெண் எங்கள் யூனிட்டில் இஅரண்டு நாள்கள்தான் வேலை செய்தார். மூன்றாம் நாள் உடல்நிலை சரியில்லை என்று வெளியேறிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர்மீது சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன்…” என்று நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சம்பந்தப்பட்ட படமான பொன்னர் சங்கர் படத்தில் போர்க்களக்காட்சி எடுக்கும் போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மருத்துவர்கள் என்று 3000 க்கும் மேற்பட்டோர் இரவுபகலாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இயக்குநர் என்கிற முறையில், ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியமாகக் கருதி மூச்சுவிடக்கூட நேரமில்லாமல், பணியாற்றிக் கொண்டிருந்தேன். இரவில் நான் கு மணிநேரம் கூட தூக்கமில்லாமல் பணியாற்றினேன்.

ஒரு சில நாட்களே பணியாற்றிய அந்தப்பெண் படப்பிடிப்பில் எடுத்து புகைப்படங்களுடன் மாயமாகிவிட்டார், அதன்பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பது கூடத்தெரியவில்லை. ..” என்றார்.

Prithika Menon

Prithika Menon

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த நடிகர் ராதாரவி பேசும் போது, ” மீ டூ இயக்கம் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கருப்பினப்பெண் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடர்ந்த நிலையில். நம்மூரில் குறிப்பாக திரைத்துறை சார்ந்தவர்களின் மீது அதிகமாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அதன் நோக்கம் தெரியாமல்..

இந்த செய்தியை வெளியிட்ட பேப்பர் நிறுவனர்களுக்கு ஒரு களங்கம் வந்தபோது, திரையுலகமே திரண்டு தோள் கொடுத்தது. எங்கள் நடிகைகள்.மீது அவதூறு பரப்பியபோது நடிகைகளுக்காகப் பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் நடிகர் சங்க பதவியில் இருந்தபோதே பெண்களைப் பாதுகாக்க, வாசுகி கமிஷனில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டார்.

திரைத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழும் போது, ஒரு சார்பாக நடந்துகொள்ளவேண்டாம். இருதரப்பிலும் விசாரித்து செய்தியாக வெளியிடுங்கள்.

சின்மயியை யாரோ ஏவுகிறார்கள், அந்தப்பெண் பாவம். இனி வரும் காலத்தில் நடிகைகளிடம் ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா என்று கேட்பது மாதிரி “இனி நீ வெர்ஜினா..?” என்றும் கேட்கவேண்டியிருக்குமோ…

இந்த நிலை நீடித்தால் சினிமா மறுபடியும் நாடக காலத்திற்குச் சென்றுவிடும். ஆண்களே ‘ஸ்த்ரீ பார்ட்’ என்ற பெண்வேடம் போடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

தியாகராஜன், அர்ஜுன் ஆகியோர் பல ஆண்டுகாலமாகத் திரையுலகில் இருக்கிறார்கள். இதுபோன்ற செய்திகளால் அவர்களது புகழுக்குக் களங்கம்.ஏற்படுவதுடன் அவர்கள் குடும்பத்தாரின் மனங்களும் புண்படும்..!” என்றார்.

இதற்கிடையே தியாகராஜன் அலுவலகத்திலிருந்து பிரித்திகா மேனன் புகார் கூறிய தன் முகப்புத்தக பக்கங்களை நீக்கிவிட்டதாக நமக்கு செய்தி வந்தது. தியாகராஜனின் சட்டரீதியான அறிவிப்புக்கான பிரித்திகா மேனனின் எதிர்வினையாக இதைக் கொள்ளலாம்..!