seeman
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 18 கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு பத்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் காவல் துறை அதிகாரிகள், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் தடயவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் ரஜினிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
துப்பாக்கிச்சூடு தொடா்பாக நடிகா் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூகவிரோதிகளே காரணம் என பேசியிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேரணியில் சமூகவிரோதி நுழைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாகவும் அவருக்கு சமூகவிரோதிகள் நுழைந்த தகவல் தெரியும் என்றும் அதனால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் தற்போது ரஜினிகாந்த் மீது விசாரணை நடத்த சம்மன் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது
Related