March 29, 2024
  • March 29, 2024
Breaking News
June 28, 2018

எலைட் குடிமகன்களுக்கு இடி விழும் செய்தி

By 0 1021 Views

நேற்று (27-06-2018) மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைத்து அமைச்சர்களுடன் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், வணிக வரித்துறை செயலாளர் பாலச்சந்திரன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிரிலோஷ்குமார் ஆகியோரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறையைக் குறைத்து வருவாயை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதி மதுக்களுக்கான ஆயத்தீர்வையை அதிகரிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

அந்த வகையில் 12 சதவீதம் ஆயத்தீர்வையை உயர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், சென்னை அருகே ‘சியட்’ என்ற டயர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க அனுமதி கொடுப்பது தொடர்பாகவும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களில், சாதாரண மதுவுக்கான ஆயத்தீர்வை 56 முதல் 58 சதவீதமாகவும், நடுத்தர மதுவின் ஆயத்தீர்வை 58 முதல் 59 சதவீதமாகவும், உயர்தர மதுவின் ஆயத்தீர்வை 59 முதல் 62 சதவீதமாகவும் உள்ளது.

இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் மதுவகைகளுக்கான ஆயத்தீர்வை உயரும் பட்சத்தில் ‘எலைட்’ என்ற மதுபானக் கடைகளில் அன்னிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் விலை உயரலாம் எனத் தெரிகிறது. இவற்றின் தற்போதைய விலை ரூ.1,990-ல் இருந்து ரூ.21,130 வரை உள்ளது.

எவ்வளவு உயர்ந்தால் என்ன..? குடிமகன்கள் கவலைப்படப் போவதில்லை. அவர்களின் குடும்பங்கள்தான் கவலை கொள்ள வேண்டும்..!