April 23, 2024
  • April 23, 2024
Breaking News
January 11, 2019

ஹைகோர்ட் புதிய உத்தரவால் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு

By 0 892 Views

பொங்கல் பரிசாக அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப் பொருள்களுடன் ரூ. 1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை ஜேசுதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க உத்தரவிட்டது.

இதில் சிக்கல் என்னவென்றால் சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 பேர் உள்ளனர். இவர்களில் கடந்த 9-ந்தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரே‌சன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான ரூ.1,000 வாங்கிச் சென்று விட்டனர். இதனால், மீதமுள்ளவர்கள் ரொக்கப்பரிசு பெறாததால் மனவருத்தத்தில் உள்ளனர்.

அவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால், பொங்கல் பரிசான ரூ.1,000 அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த மனு இன்று விசாரணைக்கு வராத நிலையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘சர்க்கரை வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சுமார் 1 மணியளவில் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகக் கூறினர்.

அதன்படி இன்று மதியம் விசாரணைக்கு வந்த வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ‘இலவச திட்டங்களை வழங்கும்போது, பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில், அதில் ரொக்கப் பணத்தை செலுத்தாமல் மக்களைக் காக்க வைப்பது ஏன்? 1,000 ரூபாய் கொடுக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என மக்கள் கூறும் அளவுக்கு நிலைமையை உருவாக்கியது ஏன்?” என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த உத்தரவால் மன வருத்தத்தில் உள்ள மேலும் 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்.